தள்ளாடுகிற கால்கள் (feeble legs)

12/06/2020 19:55

தள்ளாடுகிற கால்கள் (feeble legs)

சகரியா 12-8 அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார். அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப் போல இருப்பான். தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப் போலும் கர்த்தருடைய தூதனைப் போலும் இருப்பார்கள்.....இதை திருவிவிலியம் கூறுகிறது.....”காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப் போலிருப்பார்”......இந்த வசனங்களில் எருசலேமின் வருங்கால மீட்பைப் பற்றி (வளத்தைப் பற்றி) வசனங்கள் 7 முதல்  10 வரை கூறுகிறது.   இஸ்ரவேலரைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம் இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது......அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன் என்றார்.... என் ஜனங்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து புலம்பும்போது நான் அவர்களுக்கு கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் ஊற்றுவேன்.

அருமையானவர்களே, நாம் ஒவ்வொருவரும் பல நேரங்களில், பல சூழ்நிலைகளில் தள்ளாடிக்கொண்டு இருக்கக் கூடும் அல்லது தள்ளாடிக் கொண்டிருக்கிறோம். நமது கால்கள் தள்ளாடினாலும் ஆண்டவர் நம்மோடிருக்கும் போது நமது வாழ்வு தாவீதின் உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக மாறிவிடும் பிரியமானவர்களே.  தாவீது கூட அநேக நேரங்களில் பாவத்தால் தடுமாறிய போது அவன் புத்தி தெளிந்து (கெட்ட குமாரனைப் போல) ஆண்டவரிடம் மனம் வருந்தி, கெஞ்சி, கண்ணீர்விட்டு பாவத்திலிருந்து விடுதலை பெற்று புதிய உயர்ந்த வாழ்வு வாழ்ந்தான்.

அருமையானவர்களே நமது தமிழ் நாட்டில் எது கிடைக்காவிட்டாலும் எப்பொழுதும் எங்கும் கிடைக்கும் மதுவினால் 41% ஆண்களும் பெண்களும் தள்ளாடுவதாக கூறப்படுகிறது அதாவது Tasmaq என்னும் மது அரக்கனால். ஆக இதுபோல நம்முடைய சரீரப்பிரகாரமாகவும், உலகப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், தள்ளாடப்படுகிற சூழ்நிலையில் திரும்ப எழுவோ, எழுந்த பிறகு மறக்கவோ முடியாமல் பல நேரங்களில் இருப்பது தெரிகிறது. ஐயோ! பழைய பாவ வாழ்க்கையை மறக்கமுடியவில்லையே என்று ஒருவேளை தடுமாறலாம்.  நான் இந்த படுபாதாளத்தில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாமல் தள்ளாடுகிறேனே என்று ஒருவேளை நினைக்கலாம். அந்த அங்கலாய்ப்பு யார் கண்ணிலும் படுகிறதோ இல்லையோ, ஆண்டவராகிய இயேசு அதை இன்று பார்க்கிறவராக மட்டுமல்ல அதை மாற்றப்போகிறார்.  ஆமென் ..

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஆண்டவரே இந்த தள்ளாட்டத்திலிருந்து நாம் மாற ஆசைப்படுகிறேன் என உங்கள் மனதில் நினைப்பீர்கள் என்றால் இந்த பாடலை (தெரிந்தவர்கள்) பாடலாம்:

“நான் மாறவே ஆசைப் படுகிறேன், என்னை மாற்றிவிடும் அருமை நேசரே!

  1. என் சிந்தை மாறனும், என் செயல்கள் மாறனும்,

      என் பேச்சு மாறனும், என் பெருமை மாறனும்...

  1. என் நடை மாறனும், என் உடை மாறனும்,

என் உள்ளம் மாறனும், ஐயா உம்மைப் போலவே ....

  1. என் ஜெபம் மாறனும், என் துதி மாறனும்,

என் சுயம் மாறனும், ஐயா உம்மைப் போலவே .... 

 

அருமையானவகளே, நாம் எந்த சூழ்நிலைகளில் தள்ளாடுகிறோம் என்பதையும், ஆண்டவர் நம்மை எப்படி தாவீதைப் போல மாற்றப் போகிறார் என்பதையும் குறித்துப் பார்ப்போம்.

அதற்கு முன்பாக எனது வாழ்வில் நடந்த ஒரு காரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னுடைய 40வது வயதில் என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் ஒருவர், எனது கையைப் பார்த்து(வைத்தியம் பார்பதற்கு), சிறிது நேரத்தில் சார், எனது நண்பர் ஒருவர் அடுத்த வாரம் வருகிறார் அவரை அழைத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு சென்றார்.  சுமார் ஒரு மாதம் கழித்து அவர் ஒரு நபருடன் வந்தார்.  அவரிடம் என் கையைக் காட்டச் சொன்னார்.  நான் காட்டியதும் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி அவர்கள் கண்களில் சில காரியங்களில் பரிமாறிக் கொண்டனர். நான் என்ன சார் என்றேன். இல்ல ஒன்னும் இல்லை சார்  என்றார். பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.  அவருடன் வந்தவர் தான் தமிழ் நாட்டின் சிறந்த கை ரேகை நிபுணர் என்றும் மேலும் நீங்கள் இன்னும் சுமார் 5 வருடங்களில் ஒரு பெரிய கண்டத்தை தாண்டவேண்டியதிருக்கும் என்றும் அதைக் கடப்பது முடியாது போல தெரிகிறது என்றும் கூறினார். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சும்மா சொல்லுங்க என்றேன்,  ஏனெனில் எனது வாழ்வு என்னைப் படைத்தவர் கையில் என்றேன். சார் உங்களது ஆயுள் இன்னும் 5 வருடம்தான் என்று கூறினார்.  ஆமாம் என்றார் எனது நண்பரும், அதுதான் இவ்வளவு தயக்கம் என்றரர்.   அன்பானவர்களே இன்று எனது வயது 60 ஆகப்போகிறது. ஆமென்.  நீங்கள் உங்கள் எதிர்காலத்தைக் குறித்து தள்ளாடுகிரீர்களா? சோர்ந்து போகவேண்டாம். “உன்னுடைய வாழ்க்கை என்னுடைய கைகளில் இருக்கிறது என்று உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்”....ஆகவே மனிதர்களிடம் உங்கள் எதிர்காலத்தைக் குறித்ததான காரியங்களை ஏடு பார்ப்பது, கை ஜோசியம் பார்ப்பது, கிளி ஜோசியம் பார்ப்பது போன்றவற்றை பார்க்க முயற்சிக்க வேண்டாம் பிரியமானவர்களே. தாவீது கர்த்தருடைய கரங்களில் விழுந்தது போல “ஆண்டவரே என்னுடைய எதிர்காலம் உம்முடைய கரங்களில் இருக்கிறது. நீர் தான் என் நம்பிக்கை, நீர் தான் அற்புதத்தை அனுதினமும் எனது வாழ்வில் செய்ய வேண்டும் என்று விசுவாசத்துடன் கேளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு அற்புதம் செய்வார். மீகா 7-15ல் கூறுவது போல ....”உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன்”. என்று உன்மேல் மனுதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். உங்களுடைய தனிப்பட்ட வாழ்வை, குடும்ப வாழ்வை, பிள்ளைகளை, திருச்சபையின் வாழ்வை ஆண்டவர் பொறுப்பெடுத்துக் கொள்வார். உங்கள் வாழ்வு ஆசிர்வாதமாக இருக்கும் பிரியமானவர்களே, மட்டுமல்ல நீங்கள் மற்றவர்களுக்கும் ஆசிர்வாதமாக இருப்பீர்கள்.

வேதம் தெளிவாக கூறுகிறது ...1 பேதுரு 5-6ல்  “ஏற்ற காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்”. என்று.   ஒருவேளை நீங்கள் எப்படிபட்ட நிலையில் இருந்தாலும், யாரும் உதவி செய்ய வரவில்லை என்று தனித்து விடப்பட்ட நிலையில், உடைந்து போன நிலையில் இருந்தாலும், எவரையும் ஆசிர்வதித்து எவரையும் பலப்படுத்தி, மேன்மைப்படுத்த கர்த்தருடைய கரத்தினால் ஆகும். ஆமென்.  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கர்த்தருடைய கரத்தை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்.

சிறு கதை :  5 வயது பையன் ஒருவன் ஆலயம் செல்லும்போது எல்லாம் ஒரு வீட்டின் நாய் அவனைப் பார்த்து குறைக்கும். ஒரு நாள் அவன் அவனது அப்பாவை கூட அவரது கையைப்பிடித்து அழைத்துச் சென்றான். அப்பொழுது அந்த நாய் குறைக்கவில்லை. அந்த சிறுவன் கெம்பீரமாக நடந்து சென்றானாம்.

இதைப்போலத்தான் ஆண்டவரே என் நம்பிக்கை என்று அவரது கரம் பிடித்து நடக்கும்போது மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல் தாவீதைப் போல தலை நிமிர்ந்து செல்லலாம்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கையினால் செய்கிற காரியங்கள் சாதாரணமானவையல்ல, அது முக்கியமானது. நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நீ தள்ளாடுவதர்க்கு நீ செய்யும் அக்கிரமங்களும், அந்தரங்க மற்றும் வெளியரங்க பாவங்களுமே காரணமாகும்.” நீ செய்யும் எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் உன் கையில் நான் கேட்பேன் என்று ஆண்டவர் கூறுகிறார்”. ஆகவேதான் இயேசுவின் கைகளிலும் கால்களிலும் சிரசிலும் விலாவிலும் துளையிடப்பட்டது.  அவர் நமக்காக இரத்தம் சிந்தினது மட்டுமல்ல தமது ஜீவனையே நமது இரட்சிப்புக்காக  கொடுத்தார்.

அருமையானவர்களே, நீங்கள் ஓன்று மட்டும் செய்யவேண்டும், மனம்திறந்து ஆண்டவரே இந்த இந்த பாவங்களை நான் செய்திருக்கிறேன் என முதலில் மனம் வருந்த வேண்டும். சுத்தமான கறைபடியாத கைகளும், கால்களும் இருந்தால்தான் அந்த பரலோக சிங்காசனத்திர்க்கு நேராக போக முடியும். மனந்திருந்துக்கள் பரலோகராஜியம் சமீபித்திருக்கிறது.  தேவபிள்ளைகளே, துளையிடப்பட்ட அந்த கரத்திலிருந்து வழிகிற இரத்தம் உங்கள் மீது தெளிக்கப்படும்போது உங்களுடைய சரீரம் சுத்திகரிக்கப்படும், அப்பொழுது அவரது சந்நிதியில் நீங்கள் நிலை நிற்பீர்கள். வேதத்தில் பாப்போம் என்றால் “தாவீது உரியாவின் மனைவி பத்செபாளிடம் செய்த பாவம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பாய் தெரிந்தது”, ஆக அவனது கால்கள் தள்ளாடினது.  ஆக தாவீது நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று மனம் வருந்தினான்.

தாவீதுனுடைய வாழ்கையிலே ஏற்பட்ட மூன்று சூழ்நிலைகளில் அவரது கால்கள் தள்ளாடினதை இப்பொழுது பார்க்கலாம் :

  1. சுதந்தரத்தை அல்லது தனிமையை தவறாக பயன்படுத்தும்போது கால்கள் தள்ளாடுகிறது: Feeble in using the freedom

அரசனாகிய சவுல், தாவீதை அநேகந்தரம் கொன்று போட வகைதேடினபோதும் தாவீது சவுலுக்கு இரண்டு முறை உயிர்ப்பிச்சை தருகிறார். அவருக்கு முழு சுதந்திரம் கிடைத்த போதும் ஒரு தடவை சவுலின் சால்வையின் தொங்கலையும், மற்ற தடவை சவுலின் ஈட்டியையும், தண்ணீர் செம்பையும் எடுத்துக் கொண்டான். 1 சாமுவேல் 26-11 “நான் என் கையை கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு, கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாத படிக்கு, கர்த்தர் என்னை காக்கக் கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்றார்.       

ஆண்டவர் அபிஷேகம்பண்ணின ஊழியர்களை கனப்படுத்த வேண்டும் அல்லது அவர்களை ஓன்றும் சொல்லக் கூடாது, அதற்குப் பதில் அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டும்.  ஆனால் இன்று ஊழியர்களை தவறாக சொல்லுவது மட்டுமல்ல, அவர்களை மட்டம் தட்டி பேசி, அசிங்கப்படுத்தி, whatsaap, facebook, twitter போன்றவற்றில் மற்ற எல்லா பொதுமக்களுக்கும் தெரிகிற மாதிரி தன் மேலே மண்ணை வாரிக்கொள்ளும் அநேக கிருஸ்தவர்கள் என்று சொல்லுபவர்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மை கிருஸ்தவர்கள் அல்ல எனது பார்வையில். ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களிடம் நேரடியாக சொல்லுங்கள் அல்லது அலைபேசி, கடிதம், email மூலம் தொடர்பு கொள்ளுங்கள், அதை விட்டுவிட்டு பொதுத்தலங்களில் அசிங்கப்படுத்துவது தவறு மட்டுமல்ல யூதாசைப் போல பாவம் செய்வது அதாவது காட்டிக் கொடுப்பது என்பது எனது கருத்து. 

இங்கே ஒன்றுமட்டும் சொல்லிக் கொள்கிறேன், கடைசி காலங்களில் அநேக அந்திக்கிருஸ்துக்களும், கள்ளத் தீர்கதரிசிகளும், கள்ள உபதேசங்களும் (ஏகோவா சாட்சிகள், சாத்தானின் சபை) எழும்புவார்கள். இதில் நாம் கவனமாக ஆண்டவருடைய ஊழியர் யார் என்றும், ஊழியம் எது என்றும் தெய்வீக ஞானத்தால் தெரிந்து கொள்ளவேண்டும்.  இல்லாவிட்டால் அனேகர் வஞ்சிக்கப்பட நேரிடும். இது ஒருபுறம் இருக்க, ஆனால் கிறிஸ்தவர் என்று சொல்லுகிற நாம் அநேக நேரங்களில் ஆண்டவரின் ஊழியர்களை இழிவாக பேசும்/சித்தரிக்கும் இந்த பாவத்தை செய்கிறோம் அல்லவா. ஒருவேளை இவ்வாறு செய்திருந்தால் இன்றே அதை ஆண்டவரிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டு அதை மறுபடியும் செய்யவேண்டாம் பிரியமானவர்களே.  

ஆண்டவர் இந்தநாட்களில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அநேகமாக எல்லாருமே சுதந்திரமாக பல கருத்துக்களைக் பல பொதுவான வலை தலங்களிலே கூருகிறாம். அதுவே சில முக்கிய அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தும் காரியங்கள் என்றால் அரசு தண்டனை வழங்குவது வழக்கமாக இருக்கிறது.  ஆனால் இன்று நம்மில் அநேகர் இந்த கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதைத் தவறாக பயன்படுத்தி ஆண்டவரை அநேக நேரங்களில் காயப்படுத்துகிறோம் அல்லவா. 

சிறு குழந்தைகள் தன் பெற்றோரின் கையைப் பிடித்திருக்கும்போது நன்றாய் நடக்கும், கையை விடும்போது தள்ளாடி தவறி விழ நேரிடும். இன்று நாமும் ஒரு குழந்தையின் நிலையில்தான் இருக்கிறோம்.  பிரியமானவர்களே! கொஞ்சம் சுதந்திரமோ, தனிமையோ கிடைத்தவுடன் அநேக தவறுகள் செய்கிறோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறோம்.

இன்று அநேக பாவங்களுக்கு இந்த தனிமை அல்லது சுதந்திரம்தான் மூல காரணம்.  தேவையில்லாத TV சீரியல்கள், கெட்ட நண்பர்கள், கையில் இருக்கும் அலைபேசியில் தேவையில்லாத கண்ட காரியங்களைப் பார்ப்பது, Whatsapp, Facebook, twitter, you tube போன்றவற்றை தவறாக பயன்படுத்துவது. ஆக அறிவியல் வளர்ச்சியின் சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமான காரியங்களில் செலவிடவேண்டும். அதிக நேரம் அலைபேசியில் பேசுவது, தெரியாத மூன்றாம் நபரிடம் அதுவும் வேற்று பாலினத்தவரிடம் நமது மனக் குறையை கூறுவது, பிறகு மாட்டிக் கொண்டு, குறிப்பாக பெண்கள் இந்த காரியங்களில் சிக்கி தனது குடும்ப மானம் பறிபோகும் சூழ்நிலை உருவாகிறது. அநேக பெண்கள் தங்கள் அலுவலக ஆண் சக ஊழியர்களிடம் தங்கள் கணவன் பற்றி பேசுவது பெரிய ஆபத்தில் முடிகிறது.  பிறகு நீதிமன்றம், காவல் துறை, TV சானல், என்று அலைந்து திருந்து ஏன் திருமணமான பெண்கள் பலர்கூட பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, விவாகரத்து, கொலை, தற்கொலை அல்லது மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்டு யாருக்கும் பிரயோஜனமாக இல்லாமல் இருப்பது நடைபெறுகிறது. தனது பெற்றோரை தலைகுனிய வைத்து அவலட்சணமான காரியங்கள் செய்து, இளவயதின் (infactuation) ஈர்ப்பு, காதல் (love) என்ற பெயரில் lust, crush, dating என பல காரியங்களால் மனஅழுத்தம்(depression) ஆகி பல வியாதிகள் வந்து மருத்துவ செலவு செய்ய வைப்பது இன்று பார்க்க முடிகிறது.  இது அநேக கிருஸ்தவர்கள் என்று சொல்லுபவர்கள் வீட்டிலும் முக்கியமாக ஊழியர்கள் வீட்டிலும் நடைபெறுகிறது. ஐயோ பிள்ளைகளும் பெற்றோரும் படும் பாடு போதும் அன்பானவர்களே. 

நமது பிள்ளைகள் காதல் என்ற போதையில் மதி மயங்கி வாழ்வின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக ஆக்குகிறார்கள். சில குடும்பத்தில் பெற்றோரும் இதற்கு முக்கிய பொறுப்பு, தேவையில்லாத காதல், பொருந்தா காதல், இச்சையடக்க மில்லாமை, போன்ற பல பாவங்களை செய்வது இன்றைய நாகரீகம்(fashion) ஆகிவிட்டது. இன்றைக்கு அநேகர் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்று துணிகரமாக பாவம் செய்கிறார்கள். எபிரெயர் 10-29  தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து(துணிகரமாக), தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.  Of how much sorer punishment, suppose ye, shall he be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith he was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?

பவுல் கொரிந்து சபையாருக்கு சொல்லுகிறார் ...I கொரிந்தியர் 7-27. நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே.  Art thou bound unto a wife? seek not to be loosed. Art thou loosed from a wife? seek not a wife.

நாம் நமது வாழ்வை தொலைத்துவிட்டு பின்னால் வருத்தப் படுவதைவிட “வரும் முன் காப்பதே” நல்லது.  இதற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்ட பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.  நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களின் நேரத்தை கொடுக்க வேண்டும், நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் உலகம் அவர்களிடம் அன்பு செலுத்தும். வெளிப்புற பகட்டை நாமும் விரும்பக் கூடாது, நமது பிள்ளைகளுக்கும் அதை கையாள  பயிற்றுவிக்க வேண்டும். இதற்கு ஆண்டவரின் தெய்வீக ஞானம் தேவை. ஆண்டவரே எனது பிள்ளைகளை எனக்கு வளர்க்க நீர் தான் துணை செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டு ஞானம் பெற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நல்லது தீயது அறியத்தக்க ஆவியை ஆண்டவர் தருவார்.

தாவீதின் வாழ்க்கையில் 1 சாமுவேல் 16-11இல்...”தாவீது தன தகப்பனோடு இல்லாமல் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான். 17-28இல்.. வனாந்தரத்தில் தனிமையாக இருக்கிறான்” என்று வேதம் சொல்லுகிறது. ஆயினும் ஒரு சிறு தவறு கூட செய்யாமல் கர்த்தரையே துதித்துக் கொண்டிருக்கிறான். எனவேதான், வேதத்தில் காணும் பாத்திரங்களான தாவீது, யோசேப்பு, தானியேல் போன்றவர்கள் தனிமையின் பாதையில் பரிசுத்தமாக வாழுகிறவர்களாக இருந்ததால் ஆண்டவரால் உயர்த்தப்பட்டார்கள்.

முக்கியமாக தனிமையில் இருக்கும்போது உங்கள் அந்தரங்க வாழ்வை பரிசுத்தமாக காத்துக்கொள்ளுங்கள். யாருக்கும் தெரியாது என்பதைவிட, ஆண்டவருக்கு கண்டிப்பாக தெரியும். ஆண்டவருடைய கண்கள் எப்பொழுதும் அவருடைய பிள்ளைகள் மேல் நோக்கமாக இருக்கிறதாம். ஆக அவரை வேதனைப் படுத்தவேண்டாம் பிரியமானவர்களே.  அவர் அய்யோ என் பிள்ளை இந்த தவற்றை, பாவத்தைச் செய்கிறானே, செய்கிறாளே என்று மனம் வருந்துவார்.

“நீதியின் பாதையிலே அவர் நிதம் நம்மை நடத்துகிறார்,

எது வந்தபோதும் மாறாத இன்ப புது வாழ்வை தருகிறாரே”

  1. பயம் வரும்போது நமது கால்கள் தள்ளாடுகிறது (Feeble when fear comes):

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அநேக காரியங்களைக் குறித்து பயந்து கலங்குகிறோம் பிரியமானவர்களே. வியாதி வரும்போது, பிரச்சனைகள் வரும்போது, வேலை இல்லையே என்று எண்ணும்போது, எதிரிகளை காணும்போது, கடன்சுமை அழுத்தும் போது, எதிர்காலத்தைக் குறித்து எண்ணும்போது போன்ற அநேக காரியங்களை நினைத்து பயம் வருகிறது.  பிள்ளைகளைக் குறித்து பெற்றோர், தாய் அல்லது தகப்பனைக் குறித்து பிள்ளைகள், சில மாணவர்களுக்கு பரீட்சை மற்றும் ஆசிரியர்களைக் கண்டாலே பயம், பலருக்கு உயர் அதிகாரிகள் என்றால் பயம், சிலருக்கு காவல்துறை அதிகாரிகளைக் கண்டாலே பயம், மாந்திரம், பில்லிசூனியம், பேய், பிசாசு பற்றி பயம். சிலர் கரப்பான்பூச்சியைக் கண்டால்கூட பயம். இப்படி பல காரியங்களைக் குறித்து நமக்கு பயம் வரும்போது நமது கால்கள் தள்ளாடுகிறது. ஆனால் ஆண்டவரைக் குறித்ததான பயம் பட்டும் அநேகரிடம் இல்லை.

பயம் பற்றி பேசும்போது எனது அம்மாவைக் குறித்து சொல்லாமால் இருக்க முடியாது. ரத்னமணி டீச்சர் என்றால் பசுமலை பகுதியில் தெரியாத ஆட்களே கிடையாது. அவர்கள் யாருக்கும், எந்த விலங்குக்கும், எந்த பேய், பிசாசு போன்ற காரியங்களுக்கும் பயப்பட்டதை நான் பார்த்ததே இல்லை. உயர் அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்கு மரியாதையும் சில நேரங்களில் தீயதைக் கண்டால் ஒதுங்குவது மட்டுமே இருக்குமே ஒழிய, பயம் இருந்ததாக தெரியவில்லை.  எங்கள் வீடு மலை அடிவாரத்தில் இருப்பதால் நான் சிறுவனாக இருக்கும்போது பாம்புகள் நிறைய இருக்கும். அவர்கள் அநேக விஷ பாம்புகளை அடித்துக் கொன்றதை பார்த்திருக்கிறேன்.  பேய், பிசாசு பிடித்தவர்கள் வீட்டில் சென்று ஜெபம் செய்து விடுதலை அடைந்தவர்கள் ஏராளம். வீட்டிற்கு வரும் ஆண் பெண் இருவரையும் பார்த்தவுடன் அவர்தம் குணதிசயங்களை அறிந்து கொள்ளும் ஞானம் அவர்களுக்கு உண்டு.   ஆண்டவரின் பிள்ளைகளுக்கு தேவையில்லாத உலக பயம் இருக்க தேவை இல்லை. அவர்கள் சாவுக்குக் கூட பயப்படவில்லை. For Christians, death is not sadness, but gladness” என்று சொல்லுவார்கள்.  ஆகவேதான் அதை அவர்கள் கல்லறையிலும் எனது அப்பா எழுதினார்கள்.  ஆண்டவருக்கு பயப்பட்டால் உலகுக்கு பயப்படத்தேவையில்லை என்பது எனது கருத்து. 

தேவபிள்ளைகளே உங்கள் எதிர்காலம் ஆண்டவருடைய கரங்களில் இருக்கும்போது அதைக் குறித்ததான பயம் தேவைஇல்லை.  உங்கள் கலக்கத்தை, கண்ணீரைக் காண்கிற தேவன் மட்டுமல்ல, ஏற்ற நேரத்தில் உனக்கு சகாயம் செய்ய அவர் வல்லவர். 1 சாமுவேல் 17-24 “இஸ்ரவேல் ஜனங்களுக்கும் சவுலின் போர் வீரர்களுக்கும் கோலியாத்தைப் பார்த்து பயந்து

விலகி ஓடுகிறார்கள். ஆனால் சிறிய தாவீதோ எதைக் குறித்தும் பயப்படாமல் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்து கோலியாத்தை (பெலிஸ்தரை) முறியடித்தான், ஜெயம் பெறுகிறான்”. என்று ...ஆமென்.

 

சகோ.மோகன் C.லாசரஸ் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பாக நாகர்கோயிலில் ஒரு மூன்று நாட்கள் கூட்டத்திற்கு முதல் நாள் புறப்படும்போது உடல் சோர்வு, சிறிது காய்ச்சல் போன்று இருந்ததாம்.  ஆனால் அவரால் எழுந்திருக்கவே முடியாத சூழலில். ஆண்டவரே ஏன் இந்த சோர்வு, நான் இந்த மூன்று நாட்கள் இங்கே கூட்டம் நடத்த உமது சித்தம் இல்லையா? நீர் தான் எனக்கு பெலன் தர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்துவிட்டு ஒருபடியாக கூட்டத்திற்கு சென்று முதல் நாள் கூட்டம் முடிந்து ஓய்வு எடுக்கும்போது மூன்று நபர்கள் அவரைப் பார்க்க வந்தனர். அவர்கள் மூவரும் கேரளா மந்திரவாதிகள் என்றனர்.  நீங்கள் கூட்டம் நடத்தக் கூடாது என்று எவ்வளவோ மாந்திரீகம் செய்தோம்.  ஆனால் எதுவும் பலிக்கவில்லை மாறாக எங்களுக்கு சோர்வும் காய்ச்சலும் வந்தது என்றனராம். அவர்கள் மூவரும் மற்ற இரண்டு நாட்கள் கூட்டங்களில் பங்கேற்றனராம். ஆக மூன்று  நாட்களும் ஆசிர்வாதமாக கூட்டம் நடந்ததாம்.                     

தாவீது சில நேரங்களில் பாவம் செய்தாலும் அவன் மனம் வருந்தி ஆண்டவரிடம் வந்தபின் கர்த்தர் மேல் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததால் அவனது கால்கள் தள்ளாடவில்லை. ஆண்டவர் இன்று நம்மையும் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி நமது கால்களும் தள்ளாடாதவாறு காத்துக் கொள்வார்.  ஆமென்

சங்கீதம் 125-2 “பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப் போல கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்”. கர்த்தர் உங்களைச் சுற்றிலும் வேலி அடைத்திருக்கிறார், பயப்படாதிருங்கள். எந்த சாத்தானும் அந்த வேலியின் உள்ளே புக முடியாது. ஆமென்.

நடந்த சம்பவம் : ஒரு அமெரிக்க செல்வந்தர் யுத்தக் காலத்தில் அணுகுண்டு வீச்சுக்கு தப்பி அவரது குடும்பத்தைக் காக்க “அணு பாதுகாப்பு மறைவிடம்” ஒன்றைக் கட்டி, அதின் பிரதிஷ்டைக்கு “மாரிஸ் செருல்லோ” என்ற ஊழியரை ஜெபிக்கும்படி அழைத்துச் சென்றாராம்.  இந்த மறைவிடம் பல மூலப்பொருள்கள் மூலம் கட்டப்பட்டது என்றும், எந்த அணுகுண்டும் துளைக்க முடியாது என்றும் கூறினாராம். அப்பொழுது அந்த ஊழியர், எனக்கும் ஒரு பாதுகாப்பு மறைவிடம் இருக்கிறது என்று சொல்லி அது நீர் பயன்படுத்திய மூலப்பொருள்களைக் காட்டிலும் அதிக திடம் அல்லது பெலம் உள்ளது என்றாராம். அது என்ன என்று கேட்டதற்கு “சங்கீதம் 91 : 1 – 4 தான் அந்த மறைவிடம் என்றாராம். “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் ......அவர் தமது சிறகுகளாலே என்னை(உன்னை) மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும்”. என்று கூறினார்.

ஆம் பிரியமானவர்களே, நீங்கள் அந்த அடைக்கலத்திருக்குள் நிலைத்திருபீர்கள் என்றால் உங்கள் கால்கள் தள்ளாடுவதில்லை, பயம் உங்களை விட்டு ஓடிப்போகும்.

“உன்னை நோக்கும் எதிரியின் கண்ணின்முன்னே பதறாதே,

 கண்மணிபோல் காக்கும் கரங்களில் உன்னை மூடி மறைப்பாரே”

                   

  1. புகழ் வரும்போது நமது கால்களில் தள்ளாட்டம் வருகிறது :

நமக்கு திடீரென பதிவு உயர்வு, அதிகாரம் கிடைத்தாலோ, பணம் கிடைத்தாலோ, படிப்பில் முதலிடம் வந்தாலோ, யாரவது நம்மை புகழ்ந்து பேசினாலோ, எதிர்பாராது திருச்சபை கமிட்டியில் மற்றும் திருமண்டல தேர்தலில் வெற்றி கிடைத்தாலோ நாம் புகழ்ச்சியினால் தள்ளாடுகிறோம் அல்லவா. பலருக்கு நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னாலே போதும், சிலருக்கு உங்கள் மனைவி ரொம்ப அழகு, உங்கள் கணவன் நல்லவர், உங்கள் பிள்ளைகள் திறமையானவர்கள் என்றாலே போதும் நாம் அநேக நேரங்களில் தள்ளாடுகிறோம்.

பல ஊழியர்கள் இன்று நல்ல பிரசங்கம், நல்ல ஆராதனை, அருமையான பாடல்கள், மேலும் சில ஊழியர்கள் தங்கள் ஊழியத்தில் அற்புதம் நடக்கும்போது, பிசாசுகள் ஓடும்போது சந்தோசத்தின் உச்சியில் சென்று விடுவார்கள். பிரதர் நான் இப்பொழுது ரொம்ப பிசி என்பார்கள், ஆண்டவர் செய்த அதிசயங்களை எனது மூலம் செய்கிறார் என்பார்கள். “என் ஆண்டவர்” என அடிக்கடி  சொல்லுவார்கள்.  நல்லது, இயேசு சொன்னார் “ஆவிகள் உங்களுக்கு கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்” என்று லூக்கா 10-20 இல் கூறினார்.                                            

                         

சிலர் எப்பொழுது பார்த்தாலும் பணம் புகழுக்காக வேலை, வேலை என்று சொல்லி தனக்குள்ளிருக்கிற ஆத்தும தீபத்தைக் குறித்து அக்கறை இல்லாமல் “ஓவர் டைம்” டியுசன், part time வேலை, என்று சொல்லி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கூட பங்கு கொள்ளுவதில்லை.  சிலர் மிகுந்த வேலை பளுவில் அல்லது நெருக்கத்தில் அசதி/சோர்வு(tired) ஆகி இரவு குடும்ப ஜெபமோ, தனி ஜெபமோ செய்யமுடிவதில்லை. இன்று பெரும்பாலான IT தொழிலில் வேலை செய்யும் பிள்ளைகள் ஆண்டவரை மறந்த சூழலில் இருக்கின்றனர். இவ்வாறாக இருப்போமேன்றால் நமது கால்கள் தள்ளாடுவது நேரிடும், பிறகு தனிப்பட்ட, குடும்ப வாழ்வும் தள்ளாடும் நிலைக்கு வரும். அப்பொழுது ஆண்டவரே என்று கதறும் சூழ்நிலை வரும் அல்லது தள்ளப்படுவார்கள். நமக்கு (balanced life) சமனான வாழ்வு வேண்டும் நமது ஆவிக்குரிய மற்றும் உடலுக்குரிய கவனிப்பு சரியாக இருக்கவேணும் (ஆண்டவர் கொடுத்த உடம்பு மற்றும் ஆன்மீக வாழ்வு).  ஆண்டவர் இயேசு சிறுவயது தொடங்கி எவ்வாறு வளர்ந்தாராம் “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனிதர் தயவிலும் அதிக அதிகமாக விருத்தி அடைந்தாராம்”.(ஞானம் & தேவ கிருபை = ஆன்மீக உடம்பு (வாழ்வு), வளர்த்தி & மனிதர் தயவு = (physical body) உடம்பு)

ஆண்டவர் இந்த நேரத்தில் உங்களை எச்சரிக்கிறார் பிரியமானவர்களே.          இந்த 2020 ஆண்டு நமக்கு உலகம் முழுவதும் கொரோனா(COVID-19) என்ற கொள்ளை நோயின்மூலம் இப்பொழுது எந்த ஆராதனையிலும் பங்கு கொள்ளாதவாறு செய்து விட்டார். நிர்விசாதாரனமாக இருந்த அநேகர் இன்று ஆண்டவரை தேடும் காலம் வந்துவிட்டது. எப்பொழுது ஆராதனை நடக்கும், நாம் எப்பொழுது ஆலயத்தில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்கு கொள்வோம் என்று நினைக்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. ஆண்டவர் தெளிவாக வேதத்தின் மூலம் சொல்லுகிறார் “முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூடக் கொடுக்கப்படும்”.   

வேதத்திலே பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரேவேல் மக்களுக்கு தேவன் செய்த காரியம்தான் இப்பொழுதும் நடைபெறுகிறது அதை நாம் பார்க்கலாம், II நாளாகமம் 7 13.. நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,  14. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 

இதைதான் கிருஸ்தவர்கள் என்று சொல்லுகிற நாம் செய்ய வேண்டும். கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல, ஆண்டவராகிய இயேசுவை யார் எல்லாம் ஒரு நல்வழி நடத்தும் நல்ல மேய்ப்பனாக நினைக்கிறார்களோ அவர்கள் தான் கிருஸ்தவர்கள்.  உலகில் பாவம் நீங்கி வாழும் முறையை மட்டுமல்ல பரலோகம் செல்லும் வழியையும் நமக்குக் காண்பித்தவர்தான் இயேசு. (மார்க்கம் என்றால் உலகில் வாழும் முறையை மட்டும் காண்பிப்பது, ஆனால் இயேசு பரலோகம் செல்லும் வழியையும் நமக்கு சொல்லிக் கொடுத்தவர் ஆக, இந்த கிறிஸ்தவம் ஒரு “புனித மார்க்கம்”) 

   

ஒரு கதை உண்டு, ஒரு விறகுவெட்டி காட்டிலே விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது அவனது கோடாலி தவறி புதருக்குள் விழுந்து விட்டதாம். ஐய்யோ நான் என்ன செய்வேன் இன்று சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனது மனைவியும் பட்டினியாக இருக்க வேண்டுமே என்று “கடவுளே” என்று கத்தினானாம்.  அப்பொழுது ஒரு தேவதூதன் தோன்றி மகனே ஏன் இப்படி அழுகிறாய் என்றாராம். எனக்கு இருந்த எனது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த ஒரு கோடரியும் தவறி விழுந்து விட்டது. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே நான் எனது குடும்பத்திற்கு என்ன செய்வது என்றாராம்.  உடனே மகனே அழுகாதே நான் அதை தருகிறேன் என்று சொல்லி, முதலில் ஒரு தங்கத்தினால் செய்த ஒரு கோடாலியை காண்பித்தாராம், விறகு வெட்டி, இது இல்லை என்னுடையது என்றாராம், பிறகு ஒரு வெள்ளி கோடாரியையும் காண்பித்தாராம், அதுவும் என்னுடையது அல்ல என்றானாம். பிறகு அவனுடைய இரும்பு கோடாரியைக் காண்பித்த போது இதுதான் என்னுடையது என்று உண்மையான அவனது பொருளை கண்பித்தானாம். அவனது உண்மையை போற்றி மூன்று கோடாரிகளையும் அவனுக்கே கொடுத்து விட்டாராம். அதை அவன் வீட்டிலிருக்கும் மனைவிக்கும் சொல்ல அவன் மனைவி எனக்கும் இதைப் போல பல பொருள்கள் வேண்டும் என்றாளாம். அவன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் அவள் காட்டிற்குள் புறப்பட்டுச் சென்றாளாம். சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை, அய்யோ எனது மனைவி தொலைந்து விட்டாளே என்று பதறும்போது அந்த தேவதூதன் வந்து கேட்டானாம் என்னவென்று, எனது மனைவி காணாமல் போய்விட்டார் அவளை தயவுசெய்து கண்டுபிடித்து தாருங்கள் என்றானாம். முதலில் அவர் உலக அழகி ஒருவரை காண்பித்தாராம், அவன் இவள் தான் என்றானாம். அதற்கு அந்த தேவதூதன் ஆச்சரியத்துடன் ஏன் இப்படி பொய் சொன்னாய் என்றாராம். ஆமாம், நான் இவள் இல்லை என்பேன், இன்னொரு சினிமா அழகியைக் காண்பிப்பீர்கள், அவனும் இல்லை என்பேன், பிறகு தான் எனது மனைவியைக் காண்பிப்பீர்கள், பிறகு மூவரையும் எனக்குக் கொடுப்பீர்கள். இது தேவையா ஒருவரே எனக்கு போதும் என்றானாம். அவனது அறிவை எண்ணி அவனது மனைவியை திரும்பக் கொடுத்தாராம். இன்றும் கூட அநேகர் அந்த விறகுவெட்டியின் மனைவியைப் போன்று “இருக்கிறதை அனுபவிப்பதை விட்டுவிட்டு பறக்கிறதற்கு ஆசைப் படுகின்றனர்”. பிறகு வாழ்க்கை வாழ்வதற்கு என்பதைவிட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதே என்று நிம்மதியையும் இழந்து இந்த ஒரே ஒரு வாழ்வையும் இழக்கிறார்கள். 

தாவீதின் வாழ்விலே புகழின் படியில் ஏறும்பொழுதும், ஏறி புகழின் உச்சியில் இருக்கும்போதும் அவன் தற்பெருமை கொள்ளவில்லை. இதை நாம் 1 சாமுவேல் 18 – 7ல் பார்க்கலாம் “ஸ்திரிகள் தாவீது கொன்றது பதினாயிரம் சவுல் கொன்றது ஆயிரம்” எனப் பாடும் போது தாவீது அமைதி காத்தான்.                                                                                                                                    

         அன்பானவர்களே கர்த்தர் நம்மோடு இருக்கும்போது புத்திமானாய் நடப்பது மட்டுமல்ல, சவுல் போன்ற ராஜாக்களும் பயப்படுவார்கள்.

புகழ் ஒரு போதை போன்றது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. அந்த புகழின் போதையிலே, அதிகார போதையிலே தாவீதின் கால்கள் தள்ளாடவில்லை. அதற்கு மாறாக 1 சாமுவேல் 24-14ல் “தன்னை ஒரு செத்த நாய், தெள்ளுப் பூச்சி என்று தாழ்த்துகிறார்”. ஆண்டவர் இயேசு லூக்கா 6-26ல் “எல்லா மனுஷரும் உங்களைக்குறித்து புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ......” என்று கூறுகிறார். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும் “ஐஸ்வரியமும் கணமும்(பேர்,புகழ்)  கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. இதை மறந்து புகழ், அதிகாரம், பணம், பதவி வந்ததும் சக மனிதரை அதுவும் முக்கியமாக ஆண்டவருக்கு பிரியமான திக்கற்றவர்களையும், ஏழைகளையும் மறந்தால் நமது கால்கள் தள்ளாட ஆரம்பிக்கும். ஆண்டவர் எனக்கு இதைக் கொடுத்தார், அதைக் கொடுத்தார் என்று சொல்லுவதை விட்டுவிட்டு தனது புகழைப் பாடக்கூடாது.  இவ்வாறாக நம்மைத் தாழ்த்தும் போது தாவீதைப் போல நமது கால்களையும் திடப்படுத்துவார்.  ஆமென்.  வேதம் தெளிவாக சொல்லுகிறது “தன்னைத் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான், தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான்”.

ஏசாயா 35-3 சொல்லுகிறது “தளர்ந்த கால்களைத் திடப்படுத்தி தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” என்று. நாம் இந்த உலகத்தில் நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் நமது கால்கள் தள்ளாடாதவாறு காத்துக்கொள்ளவேண்டும். அது நமது ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அவரிடம் இந்த புகழ், பணம், பதவி ஆண்டவரே நீர் கொடுத்தது, ஆக நான் உமது அடிமை என்று நம்மைத் தாழ்த்த வேண்டும். அப்பொழுது ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்.

ஒரு சிறிய மீன் அழகாக கடலில் இங்கும் அங்கும் நீந்திக்கொண்டு இருக்கும்போது நினைத்ததாம், “நாம் இருக்கும் இந்த கடல் (பசிபிக் கடல்) ஒருவேளை நீர் வற்றிவிட்டால் என்ன செய்வது” என்று. இவ்வாராகத்தான் நாமும் அநேக நேரங்களில் நினைக்கிறோம். ஆயிரம், லட்சம், கோடி மீன்கள் வசித்தாலும் கடல் வற்றிப்போகாது. ஆயிரம், லட்சம், கோடி விசுவாசிகள் கர்த்தரிடத்தில் எத்தனை ஆசிர்வாதங்களைப் பெற்றாலும் அவரது பரலோக கஜானா என்றும் குறையாது என்பது விசுவாசிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

உங்களுடைய தேவைகளைச் சந்திக்க உங்களுடைய தள்ளாடுகிற கால்களை பலப்படுத்த கர்த்தருடைய கிருபை போதுமானதாக இருக்கிறது பிரியமானவர்களே.  உலக மருத்துவர்களால் கொடுக்க முடியாத சுகத்தை, உயிரை தேவகிருபை பெற்றுக் கொடுக்கும். மருத்துவர்களுக்கு தேவையான ஞானத்தைக் கொடுக்கும். ஆமென். நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரத்தில் தாவீதைப் போல தேவகிருபை உங்களை அமரப்பண்ணும். ஆமென். ஆண்டவர் உங்களிடத்தில் கிருபை பாராட்டும்போது அதை அப்படியே விசுவாசித்து ஏற்றுக் கொள்ளும்போது தள்ளாடுகிற நமது கால்களை ஆண்டவர் ஸ்திரப்படுத்துவார்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கடவுளுடைய பிள்ளைகள் இவ்வாறாக தள்ளாடும்போது அவர்களுடைய எதிரிகள் அதாவது சாத்தான் மிகவும் சந்தோஷப்படுவான். மேலும் நாம் ஆண்டவரிடம் நெருங்க நெருங்க சாத்தானின் முதல் எதிரி நாம் தான். அதை சங்கீதம் 13-4ல் பார்க்கலாம் “நான் தள்ளாடுகிறதினால் என் சந்துருக்கள் களிகூராதபடிக்கும், இப்படி செய்தருளும்” என்கிறார் சங்கீதக்காரன்.

ஆம் பிரியமானவர்களே இந்த மூன்று காரியங்களிலும் தாவீதின் வாழ்வைப் போல நமது கால்கள் ஒருவேளை தள்ளாடிக்கொண்டிருக்கலாம். நமது ஆண்டவர் ஏசாயா 66-13ல் கூறியது போல “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களை தேற்றுவேன்” என்கிறார்.

1.நமது சுதந்திரத்தை அல்லது தனிமையை தவறாகப் பயன்படுத்தும்போது நமது கால்கள் தள்ளாடுகிறது. Feeble in using the freedom.

2. பயம் வரும்போது நமது கால்கள் தள்ளாடுகிறது. Feeble when fear comes.

3. புகழ் வரும்போது நமது கால்கள் தள்ளாடுகிறது. Feeble when fame comes.

எந்த சூழ்நினையில் நமது கால்கள் தள்ளாடினாலும் தாவீதின் கால்களைப் போல பலப்படுத்தி திடப்படுத்தி உயர்த்துகிற ஆண்டவர் நமது இயேசு கிறிஸ்து. பெரும் புயல் வந்தாலும், கடல் கொந்தளித்தாலும், படகு கவிழும் சூழல் வந்தாலும் ஆண்டவர் சொல்லுகிறார் பயப்படாதிருங்கள். சங்கீதம் 46-1 “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்”. என்று. அதை விசுவாசிப்போமா. தாவீதின் கால்களை பலப்படுத்தி உயர்த்தின ஆண்டவர் நிச்சயமாகவே உங்களையும் உயர்த்தி ஆசிர்வதிப்பார்.  நீங்கள் மற்றவர்களுக்கும் ஆசிர்வாதமாக இருப்பீர்கள்.  ஆமென்.

                                                           
பால் சுரேஷ்குமார் S

பசுமலை

98429 71959